பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மேலும் பேசியது:
உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது. இதுவரை பேரவையில் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் அப்பழுக்கற்றவர்களாகவும், மக்கள் போற்றும் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியால் அண்மையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்தக் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
மக்களின் பிரச்னைகளை மாநில அரசு கண்டுகொள்வதில்லை. மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை மாநில அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்ற திமுகவால் மட்டுமே முடியும் என்றார் ஆ.ராசா.
கூட்டத்துக்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன், நகரச்செயலாளர் நைணாமுகமது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தர்ம.தங்கவேல், முருகேசன் மற்றும் தோழமைக் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.