அறந்தாங்கியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.தெட்சிணாமூர்த்தி பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசின் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், போட்டிகளை நடத்துவபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் 15 நாள்களுக்கு முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். போட்டி அமைப்பாளர்களின் முழு முகவரி, தொலைபேசி எண் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இதேபோல் தன்னார்வலர்களின் முகவரி மற்றும் மாட்டு உரிமையாளர்களின் முகவரி மற்றும் மாடு பிடிப்பவர்களின் பெயர், விவரங்களை முழுமையாக கொடுக்க வேண்டும், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மூலம் அனைத்து காளைகளும் பரிசோதனைக்கு பிறகே களத்தில் இறங்க அனுமதி வழங்கப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகள் பெற மருத்துவ குழுவிடம் அனுமதி கடிதம் அளிக்க வேண்டும்.
போட்டிகள் குறித்த நேரத்தில் ஆரம்பித்து, குறிப்பிட் ட நேரத்தில் முடிக்க வேண்டும், காளைகளை விலங்குகள் வதை சட்டப்படி துன்புறுத்தக் கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என்றார்.
இக்கூட்டத்தில், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கே.பாலமுருகன், உதவி ஆய்வாளர் எஸ்.குணசேகரன், அறந்தாங்கி களப்பகாடு, சிலட்டூர், மறமடக்கி, வைரிவயல், கடையாத்துபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரியிருந்தவர்கள் கலந்து கொண்டனர்.