பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கோயிலின் செயல் அலுவலர் ஏஎல். வைரவன் தலைமை வகித்தார். ஆய்வாளர் கோ.கண்ணையன் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிக்கு கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் நடுவராக இருந்து வழிநடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோயிலின் தலைமை அர்ச்சகர் மு.முத்துவயிறு பரிசு வழங்கினார். புதுக்கோட்டை மனோன்மணியம் கோயில் பணியாளர் சண்முசுந்தரம், கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அம்பாள் மெட்ரிக் பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.