காணும் பொங்கலையொட்டி புகழ்பெற்ற சித்தன்னவாசலில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகைப் பெருவிழாவின் முதல்நாள் போகியாகவும், இரண்டாம் நாள் சூரியப் பொங்கலாகவும், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பாக நீர்நிலைகளுக்குச் செல்வது காணும் பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். தொடர் பொங்கல் விடுமுறையையொட்டி சித்தன்னவாசல் சுற்றுலா தலத்துக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பம் சகிதமாக வந்து, இங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமைந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றைக் கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்லிடப்பேசி, கேமராக்களில் சுயபடம் எடுத்துக் கொண்டும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்ததைக் காண முடிந்தது.
மேலும், மலையின் அழகை ரசித்தவாறு படகு குழாமில் குடும்ப சகிதம் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீஸார் செய்திருந்தனர். சுற்றுலா தலத்தில் உணவுக் கூடம் அமைத்துத் தரவேண்டும்.
பிரதான சாலையில் இருந்து சுற்றுலா தலம் செல்ல பேருந்து வசதி வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.