கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் ராகவேந்திரா (35). விவசாயி. இவர் டிராக்டரில் கந்தர்வகோட்டை- கணபதிபுரம் சாலையில் பிரிச்சுவன்னியம்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட சாலை ஓரம் ஒதுங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ராகவேந்திராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி ராகவேந்திரா இறந்தார். விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.