இலுப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இலுப்பூர் அருகேயுள்ள மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த குருநாதன் மனைவி ஜானகி (36). பூ வியாபாரியான இவர் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கல்லுப்பட்டி சாலையில் நின்று கொண்டிருந்தார். அன்னவாசலைச் சேர்ந்த பகுருதீன்(41) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் இலுப்பூர் செல்ல வேண்டுமெனக் கூறி ஜானகி ஏறியுள்ளார்.
கல்லுப்பட்டி புலியூர் ரோடு வளைவு அருகே திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ஜானகி காயமடைந்தார். இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.
இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.