காவல் பணிக்கு சேவை நோக்கமுள்ள இளைஞர்கள் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்றார் அறந்தாங்கி காவல் உதவிக் கண்காணிப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி.
அறந்தாங்கியில் மாவட்டக் காவல்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் நண்பர்கள் பயிற்சி முகாமில் அவர் மேலும் பேசியது:
நகரில் நடைபெறும் குற்றங்கள் குறையவும், காவலர் பற்றாக்குறையால் இரவு ரோந்துப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு காவல் நண்பர்கள் துணையாக இருந்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவை தான் காரணமாகும். காவலர் பற்றாக்குறை காரணமாக அனைத்துப் பகுதிகளுக்கும் ரோந்து செல்ல முடிவதில்லை. காவல் நண்பர்கள் வரும் போது ஒரு காவலர் தலைமையில் 3 காவல் நண்பர்களுடன் சேர்ந்து ரோந்து பணி மேற்கொள்ள முடியும். எனவே, சேவை நோக்கமுள்ள காவல் நண்பர்கள் இந்த இயக்கத்தில் சேர வேண்டும். மேலும் காவல்துறை பணியை தேர்வு செய்யும் போது இந்தப் பயிற்சி அவர்களுக்கு உறுதுணையாக அமையும் என்றார்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.ராஜேந்திரன், முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் மந்திரமுர்த்தி, காவல் நண்பர்கள் குழு நிர்வாகி ஸ்டெல்லா, அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கே.பாலமுருகன், உதவி ஆய்வாளர் எஸ்.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.