புதுக்கோட்டை அருகேயுள்ள சிவபுரம் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கற்பகவிநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி, கணேசர் செந்தமிழ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு அறிவு சோதித்தல், ஆச்சர்ய நிகழ்வுகள், மௌன நாடகம், பல்முனை காட்சி, வினாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும், மௌன நாடகத்தில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிராம்பட்டிணம் காதர் மொகைதீன் கல்லூரி இணைப் பேராசிரியர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.
கல்லூரி முதல்வர் பரசுராமன், துணை முதல்வர் சுதா, தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ஆர்.மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.