சாதி, சமய பேதங்களைப் போக்க வள்ளலாரின் அன்புநெறி வழியே சிறந்தது என்றார் புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை துணைப் பேராசிரியர் கிருங்கை சேதுபதி.
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த வள்ளலார் பிறந்தநாள் விழாவுக்கு கல்லூரி முதல்வர் ம. அன்புச் செழியன் தலைமை வகித்தார். வாசகர் பேரவைச் செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றினார். விழாவில் கிருங்கை சேதுபதி மேலும் பேசியது: மனித குலத்தின், ஒருமைப்பாட்டுக்குத் தடைகளாக உள்ள சாதி, சமய பேதங்களை அழித்தொழிக்கப் பிறந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று எல்லா உயிர்களையும் நேசிக்கும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை தன்னுடைய பாடல்களில் சொன்னவர். எல்லோரிடத்திலும் அன்பு வேண்டும் , எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் என்ற சிந்தனை அனைவரிடத்திலும் வேண்டும்.
பசியில் வாடிய லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து மனம் வாடி பசிப்பிணி போக்க 1867-ல் அவர் மூட்டிய அடுப்பு இன்னும் அணையாமல் பசிப்பிணி போக்கும் பணியைத் தொடர்கிறது. சாதி,சமய பேதங்களைப் போக்க வள்ளலாரின் அன்புநெறி வழியே சிறந்தது. எல்லோரும் அன்பால் கட்டுண்டு கிடக்கும் சமூகத்தைப் படைக்க வாருங்கள் என்றார் அவர்.விழாவில் மருத்துவர் ச. ராமராஸ் , காரைக்குடி கம்பன் கழக துணைத் தலைவர் மாணிக்கவேல், எழுத்தாளர் சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.