கந்தர்வகோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள் இருவரைப் பொதுமக்கள் பிடித்து செவ்வாய்க்கிழமை போலீஸில் ஒப்படைத்தனர்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள காட்டுநாவல் ஊராட்சியில் உள்ள காலனி தெருவில் கறம்பக்குடி, கந்தர்வகோட்டை சாலையோரத்தில் அருள்மிகு முன்னோடியன் சுவாமி கோயில் உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் முன்பு இருந்த உண்டியலை 2 இளைஞர்கள் உடைத்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கந்தர்வகோட்டை தென்றல் நகரைச் சேர்ந்த மூக்கையா மகன் சேதுநாதன் (23) , கந்தர்வகோட்டை அரண்மனை தெருவைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சுரேஷ்குமார் (29) இருவரும் திருட்டில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.