தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ மூலம் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.கணஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மானியத்துடன் நிதியுதவி பெற, இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் விவரங்கள், செல்பேசி எண், திட்டங்களின் விவரங்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பங்களை புதுகையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும் ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, புதுகை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.