பொன்னமராவதி அருகே ஆலவயல் பெரிய ஊரணி சித்திவிநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கு விழாவையொட்டி கோயிலின் முன் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஊர் முக்கியஸ்தர் பெரி.அழகப்பன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல, திருக்களம்பூர் ஊராட்சிக்குள்பட்ட தச்சம்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சிவாச்சாரியார் சரவண குருக்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி சுப்பிரமணிய சுவாமிக்கு குடமுழுக்கு செய்தார். தொடர்ந்து, ஞானபண்டித முருகப்பர் ஜீவசமாதி குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.