தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாக எழுப்பப்பட்ட புகாரின் பேரில் அவரது உடல் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் சக்ரியாஸ். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ஜன. 19-ம் தேதி அந்தோணியார் பொங்கல் கலை நிகழ்ச்சிக்கு சென்ற எட்வின் சக்ரியாஸ் மர்மமான முறையில் இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக எட்வின் சக்ரியாஸின் மனைவி குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளதாகவும், எனவே மகனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் எட்வின் சக்ரியாஸின் தாய் எஸ்தர் தவமணி (59) மனு அளித்தார்.
மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற ஆணைப்படி, எட்வின் சக்ரியாஸின் உடலை வட்டாட்சியர் கஜேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் தமிழ்மணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லறைத் தோட்டத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது அவர்கள் தெரிவித்தனர்.