தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொது நலக் குழுவினர் சனிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வல்லம் பேரூராட்சிக்குக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 8 மாதங்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குழாய்களில் தண்ணீர் சேரும், சகதியுமாகவும், துர்நாற்றத்துடனும் வருகிறதாம். இதனால், மக்கள் குடிநீரை குடிக்க முடியாமலும், சமைக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். குடிநீருக்காக வேறு பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீரை தூய்மையாக வழங்கக் கோரியும், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வணிகர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.