அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சிவசேனா சார்பில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு அஞ்சல் மூலம் ராமர் சிலை, செங்கல் அனுப்பும் போராட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கோயில் கட்டவில்லை. எனவே, ராமர் கோயிலை கட்ட
வலியுறுத்தி, இரண்டு அடி உயரமுள்ள பித்தளையினலான ராமர் - சீதை சிலையும், செங்கற்களையும் வைத்தும் தஞ்சை தலைமை அஞ்சல் நிலையம் முன் முழக்கமிட்டனர்.
பின்னர், அவற்றை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு பார்சல் மூலம் அனுப்ப, அஞ்சல் நிலையம் உள்ளே சென்றனர்.
அங்கு பணியில் இருந்த அஞ்சல் நிலைய ஊழியர், சிலையை அனுப்ப முடியாது என்று கூறினார். இதையடுத்து செங்கற்களை மட்டும் பார்சலில் அனுப்பி வைத்தனர்.