தஞ்சாவூரை அடுத்த வல்லம் அருகே புதன்கிழமை அதிகாலை லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி 22 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் நாகப்பட்டினம் வரதராஜன் (28) ஓட்டுநராகவும், அதே
பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (51) நடத்துநராகவும் பணியில் இருந்தனர்.
தஞ்சாவூர் வல்லம் அருகே காவல்நகர் பகுதியில் வந்தபோது, அதே வழியில் கரூரிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சிமென்ட் கற்கள் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக
மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் வரதராஜன், நடத்துநர் கோவிந்தராஜன், பயணிகள் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டவர் (49), திருவையாறைச் சேர்ந்த
கலியபெருமாள், அதே பகுதியைச் சேர்ந்த மாலதி, காஞ்சிபுரம் விஜயா என 6 பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். விபத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை
மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த வல்லம் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.