தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மழையால் பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக செப்பனிட வேண்டுமென அதிரை சுற்றுச்சூழல் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் வெளியிட்ட அறிக்கை: அதிரை பேரூராட்சிக்குள்பட்ட வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பிரதான சாலை அண்மையில் பெய்த தொடர் மழையால் பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான பேருந்துகள், லாரிகள், கார்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலை பழுதடைந்துள்ளதால் இரவு நேரங்களில் இங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினர் இந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.