ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசே இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என மாணவர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் சார்பில் கல்வி உரிமை பாதுகாப்பு, காவிரிப்படுகை பாதுகாப்பு மாணவர் மாநாடு தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.மாநாட்டிற்கு நகர குழு நிர்வாகி பா. அருணந்தி தலைமை வகித்தார். விக்னேஷ்வரன் வரவேற்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பன்னாட்டு கல்வி முதலாளிகளுக்கு இந்திய கல்விச் சந்தையை திறந்துவிட்டிருப்பதைக் கண்டிப்பது. கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
கல்வியை காவிமயமாக்கும் முயற்சியை கைவிட்டு, அறிவியல் பூர்வமான கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் அரசாணையை மதிக்காமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும்.
கல்விக் கடன் திட்டத்தை கைவிட்டு, ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசே இலவசமாக கல்வி வழங்க வேண்டும். இந்தி மொழி திணிப்பைக் கைவிட வேண்டும்.
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோ கெமிக்கல் போன்ற பேரழிவுத் திட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் முதல்வர் சிவக்குமார், சிபிஎம்எல் மக்கள் விடுதலை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சதீஷ்குமார், தமிழ்நாடு மாணவர் இயக்க பொதுச்செயலாளர் ஜெ. பிரபாகரன், தமிழ்நாடு இளைஞர் இயக்க அமைப்பாளர் அருண்சோரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.