பட்டுக்கோட்டை அருகே 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமைக் காவலரை கொலை செய்த ரௌடி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் ஜி.குணசேகரன் (83). வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கடந்த 8-12-2015 அன்று இரவு மர்மநபர் கத்தியால் குத்திக்கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாகவுள்ள கிரிமினல் குற்றவாளிகள் சிலரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் குணசேகரன் கொலை வழக்கில் தேடப்பட்ட பட்டுக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ரௌடி பழனி (எ) நாச்சி பழனி (33) பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் விஏஓ கருப்பசாமியிடம் புதன்கிழமை மாலை சரணடைந்தார். இதையடுத்து, பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நாச்சி பழனியை போலீஸார்
வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை மீட்டனர். பின்னர், பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாச்சி பழனியை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் நாச்சி பழனி திருச்சி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.