தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, கணேசபுரம் உட்பட சுமார் 32 மீனவ கிராமங்களில் 3000 நாட்டுபடகுகள், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் ஆகியவை உள்ளன.
ஒக்கி புயலைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட கடல் சீற்றமாககாணப்பட்டதால் கடந்த 30 ஆம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில்அடித்து வருகிறது. கடல் அமைதியாகக் காணப்படுகிறது. தஞ்சை மாவட்ட கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்வது கிடையாது.
எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்ய அனுமதியளிப்பதுடன் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற மீனவ சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மீன்வளத்துறைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கவில்லை. இதனால் சுமார் 12 ஆயிரம் மீனவர்கள் வேலையிழந்து தவிப்பதுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.