தஞ்சாவூர் அருகே பூச்சி மருந்து குடித்து கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய அலுவலர். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன். இதில் கடைசி மகள் மகாராணி (17). தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்தது. இத்தேர்வை மகாராணி சரியாக எழுதவில்லையாம். இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
தேர்வு விடுமுறை முடிந்து, வியாழக்கிழமை கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
செந்தமிழ்ச்செல்வன் வீட்டில் மகாராணி உள்பட குடும்பத்தினர் அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவு உணவு முடிந்து உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த மகாராணி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயக்கமடைந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மகாராணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.