கும்பகோணம் அருகே அசூர் சாரதி நகரில் கட்டப்பட்டுள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் உடனடியாகத் திறக்க வலியுறுத்தி, அந்நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அசூர் சாரதி நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேவையான பணியாளர்களை உடனே நியமனம் செய்து, அந்நிலையத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். மேலும், கட்டி முடிக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்குக் கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும். மேலும், இந்த கட்டடங்களைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி பள்ளத்தை மேடாக்க வேண்டும்.
அசூரிலுள்ள கழிப்பறையைச் சுத்தம் செய்ய துப்புரவு பணியாளரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். கிளை செயலாளர்கள் சுரேஷ், உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.