தில்லியில் மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் விவசாயிகள் சார்பில் வழிபாடு நடத்தப்பட்டது. தில்லியில் கடந்த நவ. 21, 22 ம் தேதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 23 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். அடுத்து, தில்லியில் மார்ச் 23 ஆம் தேதி அண்ணா ஹசாரேவுடன் இணைந்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பயிர்க்கடன் வழங்கவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலையில் சுவாமியின் பாதத்தில் டிச. 9-ம் தேதி விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வைத்தும், தில்லியில் மார்ச் 23-ம் தேதி மீண்டும் நடைபெறும் போராட்ட விளக்க பிரசுர நோட்டீசுகளை வைத்தும் வழிபாடு செய்ய உள்ளோம். மதுரையில் டிசம்பர் 10 ஆம் தேதி அண்ணா ஹசாரே தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார் அய்யாக்கண்ணு.
அப்போது தஞ்சை மாவட்ட காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் உடனிருந்தார்.