பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கப் பிரச்னைகளை டிச. 15-க்குள் சரிசெய்வதாக வியாழக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மாவடுகுறிச்சி கூட்டுறவு கடன்சங்க நிர்வாக பிரச்னைகளை சரிசெய்ய வலியுறுத்தி சாலைமறியல் செய்யப்படும் என பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசு தரப்பில் கூட்டுறவு சங்க மாவட்ட பதிவாளர் மாரியப்பன், காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் கிராம பொதுமக்கள் தரப்பில் கணேசன், கோவிந்தராசு, நீலகண்டன், இராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்க குளறுபடிகளைக் களைந்து உரிய தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது.