கோவையில் ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றபோது, கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 22-ஆம் தேதி வரை காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ரியல் எஸ்டேட் புரோக்கர்களான கோவையைச் சேர்ந்த என். சந்திரசேகரன் (48), இடையார்பாளையம் ரா. ஜெயம்பாண்டியன் (39), கேரள மாநிலம், பாலக்காடு பருவச்சேரி பி. சிபுபாலச்சந்திரன் (34) ஆகிய 3 பேரும், கோவை பீளமேடு பகுதியில் கடந்த மாதம் ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 3 பேரையும், கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரையடி உயரமுள்ள பழைமையான ஐந்து தலை நாகக் கன்னி ஐம்பொன் சிலை, அரையடி உயரமுள்ள சரஸ்வதி ஐம்பொன் சிலை மற்றும் வலம்புரி சங்கு, 1818-ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அரிக்கேன் விளக்கு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சந்திரசேகரன் உள்ளிட்ட 3 பேரையும் கடந்த 5-ஆம் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் 3 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.