பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மாவட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தினர் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் அகில இந்திய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், கடந்த ஜனவரி மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் டவர்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஊதியக் குழு பரிந்துரைகளில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அண்மையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செவ்வாய், புதன்கிழமைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுமார் 700 பேர் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக பிஎஸ்என்எல்-இன் தொலைபேசி இணைப்புகள், பிராட்பேண்ட் இணைப்புகள் பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வி. சாமிநாதன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயன், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பாபநாசத்தில்... பாபநாசம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் என்.எப்.டி.இ. ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செல்வராஜ், இளஞ்செழியன், பாலசுப்ரமணியன், ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.