தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருள்களைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் கல்லூரி சந்தை நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருள்களை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளவும் ஏற்ற வகையில் விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. இச்சந்தையை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். திட்ட இயக்குநர் கு. இந்துபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் தஞ்சாவூர், சென்னை, கடலூர், திருச்சி, நாகை, ஈரோடு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், தஞ்சாவூர் பொம்மைகள், டெக்ஸ்டைல், கவரிங் நகைகள், மூலிகை, பேன்ஸி பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், கீ செயின், மரப்பொருள்கள், சணல் பைகள், சிற்பம், பட்டுப்புடவை, சோப், ஜுட், கடற்சிப்பிகள், நரிகுறவர் மணிமாலைகள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இக்கண்காட்சி புதன்கிழமை (ஜூலை 19) வரை நடைபெறவுள்ளது.