தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை விண்ணப்ப இயக்கம் நடத்தினர்.
தஞ்சாவூர் அருகே கொடிக்காலூர், திட்டை கிராம நிர்வாக அலுவலகங்களில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் டி. கணேசன், விவசாயிகள் சங்க அமைப்பாளர் ஜி. ராமலிங்கம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
இந்த மனுக்களில் குடியிருப்பு பட்டா கோருதல், மின் விளக்கு சீர் செய்தல், குடிநீர், புதை சாக்கடை வசதி கோருதல், மதுக்கடை அகற்றுதல், பேருந்து, சாலை வசதி, அத்தியாவசிய பண்டங்களை அங்காடிகளில் வழங்குதல் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.