கும்பகோணத்தில் குழந்தை இல்லாததன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மனைவியை திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே கீழமாத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் ஆறுமுகம் (எ) மூர்த்தி (45). லாரி உரிமையாளர்.
இவருக்கும் காவனூரைச் சேர்ந்த கவிதாவுக்கும் (40) 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கவிதாவுக்கு குழந்தை பிறக்காததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, தனித்தனியாக வசித்தனர்.
இதனிடையே, மூர்த்தியும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். இருவரும் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகினர். இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்துவைத்து தாராசுரத்தில் குடியமர்த்தினர். ஆனாலும், குழந்தை இல்லாதது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு திங்கள்கிழமை வந்த கவிதாவின் தம்பி ராஜாவுக்கும், மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் தாக்கப்பட்டு காயமடைந்த ராஜா தாலுகா காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் செய்தார்.
இதையடுத்து, ராஜாவும், போலீஸாரும் வீட்டுக்குச் சென்றபோது, கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது.
போலீஸாரும், அப்பகுதி மக்களும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கவிதா அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கவிதாவை கொலை செய்ததாக மூர்த்தியை போலீஸார் கைது செய்தனர்.