தீக்குளித்து பெண் சாவு: கணவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண்ணின் கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மெலட்டூர் காவல் சரகம் சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35), அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குன்னம் ஊராட்சி செயலர். இவருடைய மனைவி சரிதா (33). திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த சரிதா கடந்த 6-ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து மெலட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தஞ்சாவூர் உதவி ஆட்சியர் சுரேஷும் விசாரணை மேற்கொண்டார். அதில் பாலமுருகன் மனைவி சரிதாவை கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி ஆட்சியர் மெலட்டூர் போலீஸாருக்கு கொடுத்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பாலமுருகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.