கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நகல் எரிக்கும் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சத்துணவுத் துறைக்குத் தமிழக அரசுத் தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்குப் பணி விதிகளைத் ஏற்படுத்தி பணிவரன்முறை செய்ய வேண்டும். தற்போது அரசு யோகா ஆசிரியர் நியமனம் செய்ய இருப்பதால், அப்பணியிடங்களில் சத்துணவு அமைப்பாளருக்குக் கல்வித் தகுதி, பணிமூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் உரிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஏற்று மார்ச் 31-க்குள் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், சென்னையில் அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலர் சமயபுரத்தான், பொருளாளர் கலியபெருமாள், துணைத் தலைவர் மரியகிறிஸ்டி அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.