பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உலக காச நோய் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை பட்டுக்கோட்டை குளோபல் நர்சிங் கல்லூரி, மனோரா ரோட்டரி சங்கம், பட்டுகோட்டை நகராட்சி ஆகியவை இணைந்து நடத்தின.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவ அலுவலர் டி.ராணி, காசநோய் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். மேலும், மருத்துவமனையில் காச நோய்க்கான சளி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்குவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வுப் பேரணியை நகராட்சி ஆணையர் கே.அச்சையா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில், மருத்துவர்கள் சண்முகவேல், சர்மிளா, சிவா, முருகேசன், மங்கையர்கரசி, அருண்குமார், எட்வின், மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் அ. பூவலிங்கம், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் என். ரவிச்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் இரா. அண்ணாதுரை, குளோபல் நர்சிங் கல்லூரி மாணவிகள், அதன் தாளாளர் கே. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி நகராட்சி அலுவலகம் சென்றதும் நிறைவடைந்தது.