அரசு, அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் மே 10-ஆம் தேதி முதல் விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேட்டை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளைக் கவனமாகப் படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகின்றனர் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்பம் அளிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம்.