தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை இரவு மது அருந்தியவர் இறந்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை உடைத்தனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கானூர்பட்டி நான்கு சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இக்கடையில் வியாழக்கிழமை இரவு மது அருந்திய சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் வெளியே வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மதுக்கடையை அகற்ற வலியுறுத்தியும், திருக்கானூர்பட்டி ஊராட்சி எல்லையில் மதுக்கடை இருக்கக் கூடாது எனக் கோரியும் அக்கடைக்குள் புகுந்து சுமார் மது பாட்டில்களை எடுத்து கீழே போட்டு உடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
வல்லம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.