கும்பகோணம் வட்டார வள மையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி கும்பகோணம் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி தலைமையாசிரியர் கே. செல்வராஜ், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் எம். பாக்கியராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். கண்காட்சியில் 7 தொடக்கப் பள்ளிகள், 4 மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்றன. இதில் போக்குவரத்துத் தகவல் தொடர்பு, கழிவு மேலாண்மை, கணித மாதிரிகள், சரிவிகித உணவு போன்ற பிரிவுகளில் மாணவர்கள் காட்சிப் பொருட்களை தயார் செய்திருந்தனர்.
கண்காட்சியில் மேல்நிலைப் பிரிவில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி உதவி பெறும் பள்ளி மாணவர் ஏ. மாதேஷ் முதலிடமும், நகர மேல்நிலைப் பள்ளி மாணவர் கே. துரைராஜ் இரண்டாமிடமும், நேட்டிவ் பள்ளி மாணவர் என். பாரத் மூன்றாமிடமும் பெற்றனர்.
தொடக்க நிலை பள்ளிகளுக்கான பிரிவில் சுந்தரம் உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர் ஏ. அகிலன் முதலிடமும், கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி பள்ளி மாணவி ஏ. திவ்யா இரண்டாமிடமும், விஜயா உதவி பெறும் பள்ளி மாணவர் ஸ்ரீநிதி மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டதாரி உதவித் தலைமையாசிரியர் இளம்பூரணன், நகராட்சி நகரத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆர். புவனேஸ்வரன், இடைநிலை உதவித் தலைமை ஆசிரியர் பி.ஜான்ஸ்டீபன், கோபு சிவகுருநாதன் நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.