பேராவூரணி அரசு மருத்துவமனையில் மின்தடை நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேராவூரணி தொகுதியின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் இம்மருத்துவமனையில் பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினசரி பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு ஜெனரேட்டர் இருந்தும் செயல்படுவதில்லை. மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணியின்போது மட்டுமே ஜெனரேட்டர் இயக்கப்படுவது வழக்கமாம்.
மற்ற நேரங்களில் இரவு, பகல் எப்போது மின்சாரம் தடைபட்டாலும் ஜெனரேட்டர் இயக்கப்படுவது இல்லை.
ஜெனரேட்டர் பராமரிப்புக்காக குறைந்தளவே டீசல் வாங்குவதற்கு நிதி அளிப்பதால் ஜெனரேட்டர் இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. மழைக்காலத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடும்போது, அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருப்போர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலனை கருத்தில்கொண்டு,
தடையற்ற மின்சார வசதி கிடைத்திட மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.