செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஏழை, எளிய பெண் குழந்தைகள் 350 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமண தேவைகள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசானது கடந்த 2014ஆம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவ. 13ஆம் தேதி வரை இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர இயலாத நிலையில் உள்ள ஏழை, எளிய பெண் குழந்தைகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 350 பெண்குழந்தைகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாஸ் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
விழாவில் அஞ்சல்துறை கும்பகோணம் கோட்ட உதவி கண்காணிப்பாளர் அருள்தாஸ் வரவேற்றார். தபால்துறை இயக்குநர் தாமஸ்லூர்துராஜ் மற்றும் உதவி இயக்குநர் குஞ்சிதபாதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செல்வமகள் திட்டத்தில் சேர்ந்ததற்கான பாஸ் புத்தகத்தை பெண் குழந்தைகளிடம் வழங்கினர்.
கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளர் துரைசாமி, அஞ்சல்துறை சார்பில் நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறினார். குத்தாலம் கோட்ட அஞ்சல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் பயனாளிகள் பட்டியலை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில், கும்பகோணம் தெற்கு அஞ்சல் கோட்ட ஆய்வாளர் ஆசிப் இக்பால் நன்றி கூறினார்.