கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள நகராட்சி காரநேசன் மருத்துவமனைக்குள் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் துப்புரவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் 280 பேரும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் கும்பகோணம் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. எனவே, துப்புரவு தொழிலாளர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீண்டும் பணியில் ஈடுபட நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.