பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூரில் மின்வெட்டை கண்டித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்தும், டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மெலட்டூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தஞ்சாவூர்-திருக்கருகாவூர் பிரதான சாலையில் மெலட்டூர் கடைவீதி நால்ரோடு பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மெலட்டூர் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டதாக 19 பேரை கைது செய்தனர்.