டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட வேண்டும் என்றார் வருவாய் நிர்வாக ஆணையரும், டெங்கு கண்காணிப்பு அலுவலருமான கே. சத்தியகோபால்.
தஞ்சாவூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழுப்பு நடவடிக்கையை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் தெரிவித்தது:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தென்படும் பகுதிகளில் வீடுகளைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்கு தூய்மைப் பணி செய்ய வேண்டும். தலா ஒரு சுகாதாரப் பணியாளர், உள்ளாட்சி பணியாளரைக் கொண்டு சுழற்சி முறையில் இடங்களை மாற்றாமல் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். மேலும், நாள்தோறும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றார் சத்தியகோபால்.
முன்னதாக, அவர் தஞ்சாவூர் பெரிய கோயில், அகழி, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துளசியாபுரம் மூன்றாவது தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஏ. சுப்பிரமணி, மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ், கோட்டாட்சியர் சி. சுரேஷ், நகர் நல அலுவலர் நமச்சிவயம், வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.