வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை முறைப்பாசன முறை அமல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது:
கல்லணையில் அக். 23 ஆம் தேதி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஆனால், கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம் (தென் பகுதி) உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சென்றடையவில்லை. அப்பகுதிகளில் பெரும்பாலும் ஏரி, குளத்துப் பாசனம்தான் மேற்கொள்ளப்படும். எனவே, ஏரி, குளங்கள் நிரம்பினால்தான் பாசனத்துக்குத் தண்ணீர் செல்லும். ஆனால், எந்த ஏரிக்கும், குளத்துக்கும் தண்ணீர் சென்றடையவில்லை. இதனால், அப்பகுதிகளில் சாகுபடி பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை.
எனவே, முறைபாசன முறையைக் கைவிட்டு தொடர்ந்து குறைந்தது 10 நாள்களுக்காவது முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். மேலும், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் விடப்பட்டு வந்த நிலையில், இப்போது விநாடிக்கு 15,000 கன அடி வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் கடைமடைப் பகுதிகளுக்குச் சென்றடையாது.
எனவே, வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் வரை மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி வீதமும், கல்லணை, கல்லணைக் கால்வாயில் முறை வைக்காமலும் தண்ணீர் விட வேண்டும்.