பட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் கேன்சர் சென்டர், பட்டுக்கோட்டை கேபி டிரஸ்ட், கேடிஎம் மருத்துவமனை, லயன்ஸ் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய மினி மாரத்தானில், 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் என 2 பிரிவுகளாகப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் எஸ். வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். டாக்டர் கே. பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் என். அன்பழகன், ஆடிட்டர் சி. ராஜகோபால், வழக்குரைஞர் ஆர். ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு பரிசு வழங்கிப் பாராட்டினார். மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் டி-ஷர்ட், சான்றிதழ், பதக்கம், மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற 150 பயனாளிகளுக்கு இலவசமாக சர்க்கரை அளவு, ஈசிஜி, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளான திசுப்பரிசோதனை, பாப்ஸ்மியர் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 14 பேருக்கு புற்றுநோயின் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் மருத்துவச் சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டது.