தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்கள் வரப்பெற்றன.
இவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத் திறனாளி நலத் துறை சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 33,960 மதிப்பில் நடைபயிற்சி சாதனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ராஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.