தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ஆக. 14-ம் தேதி கரும்பு கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
கரும்பு விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து உற்பத்தி திறனை அதிகரித்தால்தான் கரும்பு விவசாயம் லாபகரமானதாக அமையும். இதற்குத் தரமான விதைக் கரும்பைப் பயன்படுத்தி நடவு செய்வதுடன், நவீன தொழில்நுட்பங்களை நீடித்த நவீன கரும்பு சாகுபடி, நுண்ணீர் பாசனம் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி சாகுபடி முறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
இந்தத் தொழில்நுட்ப முறைகளை அனைத்து கரும்பு விவசாயிகளும் அறியும் விதமாக ஆலை வளாகத்தில் ஆக. 14-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரும்பு கண்காட்சி செய்யப்பட்டுள்ளது.
இதில் புகழ்பெற்ற பண்ணை இயந்திர நிறுவனங்கள், உரம் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள், வங்கிகள், எரிபொருள் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்பக் கருத்துகளை விவசாயிகளுக்கு தெரிவிப்பதோடு புதிய வேளாண் கருவிகளையும் காட்சிப்படுத்தவும் உள்ளனர்.