சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரகபூர் உள்பட 6 பேர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 2008 ஆம் ஆண்டு 20 சுவாமி சிலைகள் திருட்டு போனது. இதேபோல ஸ்ரீபுரந்தான் பிரகதீசுவரர் கோயிலிலும் அதே ஆண்டு 8 சிலைகள் காணாமல் போனது.
இந்த இரு வழக்குகளிலும் சுபாஷ் சந்திர கபூரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபாஷ்சந்திரகபூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், மாரிச்சாமி, ஸ்ரீராம் சுலோகு, பாக்கியகுமார், பார்த்திபன் ஆகிய 6 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் இதுவரை அரசுத் தரப்பு சாட்சியங்களாக 15 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். 16-வது சாட்சியாக அப்ரூவரான பிச்சுமணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு ஆக. 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.