பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் பட்டுக்குடி முருகன் கோயில் என அழைக்கப்படும் மங்களாம்பிகா சமேத பசுபதீஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சண்முக சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி விழாவில், நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, யாத்ரா தானம் கடம் புறப்பாடு செய்து கோயில் விமானம், மூலவர் கோபுர கலசங்களுக்கு சிவச்சாரியார்களால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு இறையருள் பிரசாதங்கள், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாலையில் மகாஅபிஷேகமும், முருகன் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.