தமிழக முன்னாள் அமைச்சரும், அமமுக அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ். செல்வத்தின் தந்தையுமான எஸ்.டி.சோமசுந்தரத்தின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அருகே செண்டாங்காடு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு அமமுக மாவட்டச் செயலாளர் மா.சேகர் தலைமையில், மாநிலப் பொருளாளர் எம்.ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.டி.எஸ் அறப்பணி அறக்கட்டளை சார்பிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, வி.எம்.பாண்டியராஜன் உள்ளிட்ட அமமுக கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 210 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனையும், மருந்து, மாத்திரைகளையும் வழங்கினர்.
பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் தம்பி. ரமேஷ் வரவேற்றார். செண்டாங்காடு ஊராட்சி கழகச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.