ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி ஒரு வாரத்தில் திரட்டப்படும் என்றார் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்குக் கொங்கு மண்டலத்தில் 216 பேர் ரூ. 70 லட்சம் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே ரூ. 13 லட்சம் வரப்பெற்றது.
மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் மூலம் ரூ. 1.80 கோடி கிடைத்துள்ளது. இதில், ஒரு பகுதி தொகை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டுவிட்டது. அனேகமாக ஒரு வாரத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்குரிய இலக்கான 40 கோடி ரூபாயும் திரட்டப்படும்.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ. 50 கோடி மதிப்பில் பழந்தமிழர் பண்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், உன்னதமான தமிழன்னை சிலை அமைக்கப்படுகிறது.
கீழடியில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் நிறுவனம் மூலம் 3 கட்டங்களாக ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் 8,000 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்து நான்காவது கட்டமாக ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஓராண்டுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு நிதி மூலம் அழகாபுரம், ஆதிச்சநல்லூர், கீழடி, கொற்கை ஆகிய இடங்களில் அகழ்வைப்பகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எழும்பூர் அருங்காட்சியகத்தை ரூ. 128 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 100 கோடிக்கு பணிகள் நிறைவேற்றத் திட்டமிடப்ப்டடுள்ளது என்றார் பாண்டியராஜன்.