பட்டுக்கோட்டையில் வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
பட்டுக்கோட்டையில் தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப்பனை பெருக்குத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
எண்ணெய்ப் பனை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கத்துடன் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் எண்ணெய்ப்பனை மகத்துவ மையத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அ.மதியழகன் தலைமை வகித்துப் பேசுகையில், முகாமில் பங்கேற்கும் அலுவலர்கள் அனைவரும் நன்றாக பயிற்சி பெற்று தங்கள் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு எண்ணெய்ப் பனையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி எண்ணெய்ப்பனை சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியார் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில், எண்ணெய்ப்பனை பயிர் செய்ய ஏற்ற ரகம், மரத்தின் தனிச் சிறப்புகள் ஆகியன குறித்தும், பட்டுக்கோட்டை எண்ணெய்ப்பனை மகத்துவ மைய உதவிப் பேராசிரியை ஏ.நித்யாதேவி பேசுகையில், எண்ணெய்ப்பனை கன்றுகள் நடவுமுறை மற்றும் நாற்றங்கால் பராமரிப்பு பற்றியும், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்)கே.நெடுஞ்செழியன் பேசுகையில், அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர்.
மேலும், ஒரத்தநாடு வட்டாரம், வடக்கூர் கிராமத்தில் விவசாயி காத்தலிங்கம் என்பவர் 13 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த சொட்டு நீர் பாசன முறையில் செய்துள்ள எண்ணெய்ப்பனை சாகுபடியையும், ஆடு, கோழி வளர்ப்பு செய்வதையும் அலுவலர்கள் பார்வையிட்டனர். அப்போது, விவசாயி காத்தலிங்கம் எண்ணெய்ப்பனை சாகுபடியின் மூலம் அவர் பெற்ற அனுபவங்களை அலுவலர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை துணை அலுவலர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் எஸ்.சங்கீதா நன்றி கூறினார்.