பாபநாசம் வட்டம், ராஜகிரியில் மயான பாதை அமைப்பதற்காக தேர்வு செய்த இடத்தை வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை என்றும், சரியான பாதை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்து, மயானத்திற்கு செல்வதற்கு சரியான பாதை வசதி அமைத்து தரவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மயானத்திற்கு செல்வதற்கு பாதை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் இரா.துரைக்கண்ணு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார். இதன் பின்னர், ராஜகிரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தையும் நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார். தேர்வு செய்துள்ள இடத்தில் தற்போது உடனடியாக தாற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. எம். ராம்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே. கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முகம்மது காசீம், ராஜகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஏ.ஷேக்தாவூது, ராஜகிரி பெரிய பள்ளிவாசல் ஜமாத் சபை தலைவர் நூர்பாட்சா,பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ்,பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.